‘உழைப்போரெல்லாம் தலை’ எனும் கருப்பொருளில் மே 27-28 தேதிகளில், கேரள சமாஜம் பள்ளி வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு ஓவிய கண்காட்சியை நடத்தியது. மேதினம், காரல் மார்க்சின் பிறந்த நாளை போற்றம் வகையில், உழைப்பு, உழைப்புச்சுரண்டல், ஓய்வு உள்ளிட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களை, ஓவியர் ராமமூர்த்தி ஒருங்கிணைப்பில் 20 ஓவியர்கள் படைத்தளித்தனர். இந்தக் கண்காட்சியை கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆழ்ந்து ரசித்தார். இதனோடு குழந்தைகளின் ஓவிய கண்காட்சியையும் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்.
தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய, பரிசல் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ள ‘தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம்’ எனும் நூலையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “1947 ஜனவரி - ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத தலைமறைவு காலத்தில் அனுபவித்த துன்ப துயரங்களின் சிறு தொகுப்பே இந்த நூல்.” என்று குறிப்பட்டார்.
கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் தியாகம்மிக்க வாழ்க்கையை விவரிக்க தொடங்கிய அவர், 1920ஆம் ஆண்டு தொடங்கியது முதல் 1952ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க ஆங்கிலேய அரசும், காங்கிரஸ் அரசும் மேற்கொண்ட அடக்குமுறைகளை, சதி வழக்குகளை, தலைவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை உணர்ச்சிமிகுதியோடு விவரித்தார். “அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் இருந்த போதும் கூட, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, இடதுசாரிகளை உருவாக்கி காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளாக பணியாற்றியதை எண்ணும்போது மலைப்பாக உள்ளது. அடக்குமுறைகளால் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாட்டை, மக்கள் பணியை தடுக்க முடியாது. எத்தகைய அடக்குமுறை வந்தாலும். மாற்று வடிவத்தில் செயல்படுவோம் என்பதாக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு அமைந்திருக்கிறது” என்றார்.
சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறையில் இருந்த பி.சீனிவாசராவை, அமீர் ஹைதர்கான் சந்தித்து கம்யூனிஸ்ட்டாக மாற்றியதை சுவாரசியமாக எடுத்துரைத்த அவர், “பண்ணையடிமைத்தனமும், சாதிய ஒடுக்குமுறையும் கோலோச்சிய கீழத்தஞ்சைக்கு தாமாக முன்வந்து கட்சிப்பணியாற்ற பி.சீனிவாசராவ் சென்றார். கர்நாடகத்தில் பிராமண சமூகத்தில் பிறந்தாலும், மொழி தெரியாமல், சாதி, இனவேறுபாட்டை கடந்து, பட்டியலின மக்களோடு ஒன்று கலந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அணிதிரட்டினார். 10 விரலால் உழைக்கும் விவசாயத் தொழிலாளி ஐந்து விரலால் அள்ளிச்சாப்பிட முடியாத கொடுமை நிலவியது, கணவன், மனைவி, 5 வயதுக்கு மேலான குழந்தை பண்ணை அடிமையாக வேலை செய்ய வேண்டும். எதிர்த்தால் சாணிப்பால் புகட்டி, சாட்டையால் அடிப்பார்கள். இத்தகைய சூழலில் அடித்தால் திருப்பி அடி என உத்வேகமூட்டி அணி திரட்டினார்”.
சென்னையின் மிகச்சிறந்த வழக்கறிஞராக இருந்த எம்.ஆர்.வெங்கட்ராமன், தோழர்கள் பி.ராமமூர்த்தியும், ஏ.பாலசுப்பிரமணியமும் கொண்டு வந்த வழக்குகளில் ஆஜராகி, கம்யூனிஸ்ட்டாக மாறியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிவர். “அடக்குமுறை காலத்தில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.வெங்கட்ராமன், அறிமுகமே இல்லாத தருமபுரி பகுதியில், கிராமம் கிராமாக நடந்து சென்று கட்சி வேலை செய்தார். தலைமறைவாக இருந்த அவர் தனது மனைவியின் இறுதி நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. இதுபோன்று ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பால் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கு போன்று வளர்ந்துள்ளது” என்று பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
“1952 முதல் பொதுத்தேர்தலின் போது ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் இருந்தனர். மக்கள் முன்னணி என்ற பெயரில் அணி அமைத்து போட்டியிட்டனர். பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தே வெற்றி பெற்றார். மணலி கந்தசாமியின் வீட்டை இடித்துவிட்டு, அவரது மனைவியை கைது செய்து காவல்நிலையத்தில் நிர்வாணமாக வைத்து சித்ரவதை செய்கின்றனர். நீதிமன்றத்தில் தனது கணவரை 2 வருடமாக பார்க்கவே இல்லை என்கிறார். அப்படியானால், 6 மாத கர்ப்பமாக இருக்கிறீர்களே அதற்கு யார் காரணம் என்று அரசு வழக்கறிஞர் கேட்கிறார். எனது கொழுந்தனாருக்கு கருவுற்று இருக்கிறேன் என்ற பதிலால் நீதிமன்றம் உறைந்தது. தலைமறைவு வாழ்க்கையில் இருந்த மணலி கந்தசாமியும் தேர்தலில் வெற்றிபெற்றார். மக்கள் முன்னணியும் பெரும்பான்மை பெற்றது. ஆனால் காங்கிரஸ் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. முகம்தெரியாத ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோரின் தியாகத்தில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கு போல் வளர்ந்திருக்கிறது. அந்த தியாக வரலாற்றை முன்னெடுப்போம்” என்றும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.